கண் திருஷ்டி விலகும்; கடன் தொல்லை அகலும்; ஐஸ்வரியம் பெருகும்; தீராத நோயும் தீரும்; தீயசக்தி ஓடும் - 3ம் தேதி வாஸ்து பகவானை வழிபடுங்கள்!


vaasthu


‘’பணத்தை விடுங்க... நிம்மதிதான் முக்கியம். நிறைவா வாழ்றதுதான் முக்கியம். இது கொடுக்கிற சந்தோஷத்துக்கு இணையே இல்லை’ என்று சொல்லாதவர்களே இல்லை. அந்த நிம்மதியையும் நிறைவையும் அமைதியையும் ஆனந்தத்தையும் தருகிற இடம்... வீடாகத்தான் இருக்கமுடியும்.
வீட்டில் நிம்மதி இல்லையெனில், வேறெங்கு தேடினாலும் அது கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அது தற்காலிகமானதாகவோ, தவறானதாகவோ இருக்கும். ஆக, வீடு நிம்மதியின் பிறப்பிடம் உறைவிடம் எல்லாமே!


வாடகை வீடோ... சொந்த வீடோ... நிம்மதிதான் முக்கியம். வீட்டில் யாருக்கேனும் அடிக்கடி உடல் உபாதைகள் வந்து படுத்தினாலோ, குழந்தைகள் கல்வியில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலோ, ‘அட... எவ்ளோதான் சம்பாதிச்சாலும், இன்னும் கடனெல்லாம் அடையலியேப்பா...’ என்று புலம்பிக் கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் கவலையே படவேண்டாம். நாளை புதன்கிழமை (ஜூன் 3ம் தேதி) வாஸ்து நாள்.  வாஸ்து பகவானுக்கு உரிய அற்புதமான நாள். பூஜை செய்ய உகந்தநாள்.   



ஹோமம், யாகமெல்லாம் வளர்க்கத் தேவையில்லை. பூஜை, மந்திர ஜபம் என்றெல்லாம் செய்யவேண்டும் என்கிற நியதி இல்லை. வீட்டை சுத்தமாக்குங்கள். ஒட்டடை அடித்து, தூசு படிந்த கதவு, ஜன்னல் மூலை, ஷோ கேஸ்... என எல்லா இடங்களையும் சுத்தப்படுத்துங்கள். பூஜையறையில், ஊதுபத்தி எரிந்து சாம்பலாகிப் போன துகள் துவங்கி, சூடம் ஏற்றி கருப்பேறிவிட்ட தட்டு வரை சுத்தப்படுத்துங்கள்.




காலையில், வாசலில் கோலமிடுங்கள். நிலைவாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். வாஸ்து  புருஷனின் படம் இருந்தால் நல்லது. அப்படியில்லையென்றாலும் தோஷமில்லை. ஏனெனில்,  வாஸ்து பகவான், ஒவ்வொரு இடத்திலும் சூட்சும ரூபமாக நிறைந்திருப்பதாக ஐதீகம்.


வாஸ்து பகவானை மனதில் நினைத்துக் கொண்டு, பூஜை செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல், அவல் பாயசம், கேசரி முதலான இனிப்பு வகைகளை நைவேத்தியமாகப் படைக்கலாம். சாம்பிராணிப் புகையை வீட்டின் எல்லா இடங்களுக்கும் பரவச் செய்யுங்கள். வீட்டின் முச்சந்திப் பகுதியில் சிதறுகாய் உடைப்பது சிறப்பு.
இயலாதவர்களுக்கு உணவு வழங்கி உதவுங்கள். உங்கள் வாழ்வில் வாஸ்து  புருஷன் அமர்ந்து கொண்டு, அத்தனை அல்லல்களையும் துடைத்தெடுப்பார். தோஷங்கள் அனைத்தும் விலகி, சந்தோஷங்களைப் பெருகச் செய்வார் என்கிறார்கள் ஆச்சாயர்கள்.


வாஸ்து புருஷனை வணங்குங்கள். மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் உள்ள திருஷ்டி விலகும். வீட்டில் குடிகொண்டிருந்த தரித்திரம் விலகும். இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும். தனம் மட்டுமின்றி தானியச் சேர்க்கை நிகழும். நோய்கள் அனைத்தும் நீங்கும். ஆரோக்கியமாய் வாழ்வீர்கள். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். தடைபட்ட மங்கல காரியங்கள் விரைவில் நடந்தேறும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


Comments